திருப்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கொட்டும் மழையில் போராட்டம்
திருப்பூர் செல்லம் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கொட்டும் மழையில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் செல்லம் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கொட்டும் மழையில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் செல்லம்நகரில் டாஸ்மாக் (கடை எண் 1965) செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையானது ஊரின் மையப்பகுதியில் உள்ளதாகவும், அருகில் வழிபாட்டுத் தலங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிக அளவில் உள்ளதாக கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளரிடம் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து, செல்லம் நகர் ஊர் மக்கள், அனைத்து ஊர் கோவில் கமிட்டி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, செல்லம் நகர் பிரதான சாலை கதர் கடை அருகில் அப்பகுதி பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் மத்திய காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.