நெல்லையில் இருந்து மும்பைக்கு பறந்த எச்சரிக்கை: இரு திருடர்களை மடக்கி கைது செய்த காவல்துறை
திருநெல்வேலியில் ஏடிஎம் மையத்தை மர்மநபர்கள் உடைத்து திருடமுயற்சித்த மர்ம நபர்களை போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.
திருநெல்வேலியில் ஏடிஎம் மையத்தை மர்மநபர்கள் உடைத்து திருட முயற்சிப்பது குறித்த எச்சரிக்கை மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றதால், அங்கிருந்து கிடைத்த தகவலை பயன்படுத்தி விரைவாக செயல்பட்டு திருநெல்வேலி காவல் துறையினர் இரு திருடர்களை கையும்-களவுமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பிடித்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியில் ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இரு நபர்கள் புகுந்து இயந்திரத்தை உடைத்தனர். அப்போது அதில் இருந்த தானியங்கி கேமரா கருவி மூலம் எச்சரிக்கை தகவல் மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றது. அங்கிருந்து திருநெல்வேலி மாநகர காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து மாநகர போலீஸார் விரைந்து சென்று ஏடிஎம் மையத்திற்குள்ளேயே இரு மர்ம நபர்களையும் கையும்-களவுமாக சுற்றி வளைத்தனர்.
Advertisement
விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி வண்ணாரபேட்டையைச் சேர்ந்த சேதுராமன் மகன் சுந்தர்ராஜ் (23), குண்டலகேசி தெருவைச் சேர்ந்த வடிவேல் மகன் முத்து (23) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துரிதமாக செயல்பட்ட பாளையங்கோட்டை காவல் துறையினரை மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.டாமோர், துணை ஆணையர் சரவணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.