முகப்பு
தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கூடாது: ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:59 PM
ராமதாஸ்
பகிர்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள காலியிடங்களை தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பாமல், ஒய்வுபெற்ற ஆசிரியர்களை பணியமர்த்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சுரப்பாவை நியமிக்க ஏற்பாடுகள் நடந்த போதே அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். தமிழகத்தைப் பற்றி எதுவும் தெரியாத சுரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்டால், அண்ணா பல்கலைக்கழகம் சீரழியும் என்று நான் எச்சரித்தேன். ஆனால், சிறந்த கல்வியாளரான சுரப்பா அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்தை  உயர்த்துவார் என்று கூறி, அவரை ஆளுனர் மாளிகை நியமனம் செய்தது. அதன்பின் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் எந்த வகையிலும் முன்னேறவில்லை.  

மாறாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் சீரழிந்து வருகிறது. அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் துணைவேந்தர் சுரப்பா, முக்கிய பதவிகளில் தமக்கு வேண்டியவர்களை நியமித்து   பல்கலைக்கழகத்தை சீரழித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துறைத் தலைவர்கள், புலத் தலைவர்கள் ஆகியவற்றில் தமிழர் அல்லாத, பிற மாநிலத்தவர்களை சுரப்பா நியமித்திருக்கிறார். பாடத்திட்ட இயக்குனராக தமிழகத்தின் கலாச்சாரம் குறித்து எதையும் அறியாத வட மாநிலத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டாதால் தான், பகவத்கீதை பாடமாக அறிவிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்தது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் தன்னிச்சையான போக்கு கட்டுப்படுத்தப்படாவிட்டால், அப்பல்கலைக்கழகம் சீரழிவதை தடுக்க முடியாது. எனவே, ஓய்வுபெற்ற பேராசிரியர்களை மறு நியமனம் செய்யும் முடிவை கைவிடும்படி துணைவேந்தர் சுரப்பாவுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். ஆட்சிக் குழுவை வலுப்படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் முறையாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →