இசை மனிதர்களை ஒருங்கிணைக்கிறது: குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பேச்சு
பள்ளிக் கல்வியை ஆங்கில மொழியில் கற்பதை விட தாய்மொழியில் கற்பது அவசியம் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
இசை மக்களை ஒருங்கிணைக்கிறது என்றும் இசையில் நாம் கவனம் செலுத்தினால் நம் மனதும் மேம்படும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் ஆராதனையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'ரோமாபுரி, பாபிலோனியா, கிரேக்கம், எகிப்து போன்ற நாகரிகங்களைப் போல இந்திய நாகரிகம் மிகவும் பழமை வாய்ந்தது. ஆனால், இவற்றில் இந்திய நாகரிகம் மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கிறது உலகமே நம் குடும்பம் என்பதையே நம் பண்பாடு குறிப்பிடுகிறது. இந்த கலாச்சாரம் நம் முன்னோர்களிடம் இருந்து வந்தது.
மற்ற நாடுகள் கடவுள் ஒருவரே என்கின்றன. நம் பண்பாட்டில் எவ்வளவு கடவுள்களும் இருக்கலாம். கோடிக்கணக்கில் கடவுள்கள் இருக்கும் நிலையில் அடுத்து ஒரு கடவுள் வரலாம். அது தவறு ஒன்றும் இல்லை. இதுதான் நம் பண்பாட்டின் சிறப்பு.
நம் நாடு உயரிய கலாசாரத்தைக் கொண்டது. இதுவே நம் நாடு உலக அளவில் புகழ்பெற்று இருப்பதற்கு காரணம்.
நம் நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கலாம். நாம் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நாட்டின் வளர்ச்சி என்று வரும்போது அனைவரும் ஒரே கட்சியில் இணைய வேண்டும். நாம் எந்தக் கட்சியில் இருந்தாலும் நாம் இந்தியர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
தாய்மொழியிலேயே கல்வி கற்க வேண்டும். குறிப்பாக பள்ளிக்கல்வியை ஆங்கில மொழியில் கற்பதை விட தாய்மொழியில் கற்பது அவசியம். சிறந்த சிந்தனைகளைத் தாய்மொழியில்தான் பெறமுடியும். எனவே தாய் மொழியைக் கைவிடக் கூடாது.
இசை மக்களை ஒருங்கிணைக்கிறது. நம்முடைய இசை உலக புகழ்பெற்றது. இசையில் நாம் கவனம் செலுத்தினால் நம் மனதும் மேம்படும் என்றார் வெங்கய்ய நாயுடு.
விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து ஜன. 15 ஆம் தேதி வரை ஆராதனை விழா நடைபெற உள்ளது. நிறைவு நாளான ஜன. 15 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற உள்ளது