துக்ளக் 50-ஆவது ஆண்டு விழா கருத்தில் நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக இருந்தால், நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்கத் தயார் என பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
துக்ளக் 50-ஆவது ஆண்டு விழாவில் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் ராமர், சீதை உருவ பொம்மைகள் உடையின்றி, செருப்பு மாலை அணிவித்து கொன்டுவரப்பட்டதாக நடிகர் ரஜினிகாந்த் விமர்சித்தார். அவரது பேச்சு பெரியார் ஆதரவாளர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
இருப்பினும் நான் பேசியது உண்மை, எனவே அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த், போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தபோது தெரிவித்தார்.
இந்த நிலையில், ஒரு மாற்றத்துக்காக நான் இம்முறை நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஆதரவு தரத் தயார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் பதிவிட்டதாவது,
1971-ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் பேரணியில் ராமர் மற்றும் சீதையை கேவலமாக சித்தரித்து அணிவகுத்துச் சென்றது உண்மை, இதனை சோ ராமசாமி துக்ளக் இதழில் பதிவிட்டுள்ளார். எனவே, நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தில் உறுதியாக இருந்தால், தேவைப்பட்டால் ஒரு மாற்றத்திற்காக இம்முறை அவருக்கு நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.