பொலிவியா: கரன்சி ஏற்றிச் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்து! 15 பேர் பலி; 30 பேர் காயம்
பொலிவியா நாட்டில் விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானது குறித்து...
பொலிவியா நாட்டில் விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தென் அமெரிக்காவின் பொலிவியா நாட்டில் ராணுவ சரக்கு விமானத்தில் புதிய பணத் தாள்கள் எடுத்துச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (பிப். 27) மாலை பணத் தாள்களுடன், தலைநகர் லா பாஸ்க்கு அருகே எல் அல்டோ நகர் அருகே விமானம் சென்றபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் இருந்தவர்களும் சம்பவ இடத்துக்கு அருகே இருந்த பொதுமக்களில் சிலரும் என 15 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 30 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் எல் அல்டோ நகர் அருகே விமானம் விழுந்ததால், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 15 கார்களும் சேதமடைந்தன.
இதனிடையே, விமானத்தில் இருந்த பணத் தாள்கள் சாலைகளில் சிதறியதால், அதனை அள்ளுவதற்கு பொதுமக்களும் போட்டிப் போட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர்கள் மீது நீரைப் பாய்ச்சி, காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
மேலும், இந்த விமான விபத்து குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.