போடியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: கணவன் குடும்பத்தினரைக் கைது செய்யக்கோரி மறியல்
போடியில் பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போடியில் பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கணவன் குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர். கணவன் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போடி கே.எம்.எஸ். லே அவுட் தெருவில் வசிப்பவர் பாலமுருக கணேஷ் (32). இவருக்கும் மதுரை வீரன் வடக்கு தெருவில் வசிக்கும் மகாராஜன் மகள் லிங்கேஸ்வரி (27) என்பவருக்கும் 5 வருடம் முன் திருமணம் நடைபெற்று 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. பாலமுருக கணேஷ் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் லிங்கேஸ்வரி வீட்டின் 2-வது மாடியிலும், இவரது மாமனார் குடும்பத்தினர் முதல் மாடியிலும் வசித்து வந்த நிலையில் லிங்கேஸ்வரின் வீடு மாலையில் பூட்டியிருந்துள்ளது. நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகமடைந்த மாமியார் வீட்டை தட்டி பார்த்துத் திறக்கவில்லை. ஜன்னல் வழியே பார்த்தபோது லிங்கேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு இறந்து போனது தெரிந்தது.
இதுகுறித்து அறிந்து அங்கு வந்த மகாராஜன் போடி நகர் காவல் நிலையத்தில் லிங்கேஸ்வரியின் கணவன் குடும்பத்தினரின் கொடுமையினால்தான் லிங்கேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாக புகார் செய்தார். இதனையடுத்து போடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து லிங்கேஸ்வரியின் சடலத்தை மீட்டு சடல பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, கணவன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் லிங்கேஸ்வரிக்கு திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு வகிக்கும் தேனி மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகேயனி தனி விசாரணை நடத்தி வருகிறார். போடி டி.எஸ்.பி. கோ.பார்த்திபனும் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்.
இதனிடையே வெள்ளிக்கிழமை பிற்பகலில் சடலக் கூறாய்வு முடிந்தவுடன் லிங்கேஸ்வரியின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து லிங்கேஸ்வரியின் உறவினர்கள் போடி அரசு மருத்துவமனை முன் போடி-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த போடி வட்டாட்சியர் மணிமாறன், போடி டி.எஸ்.பி. ஜி.பார்த்திபன், ஆய்வாளர் முருகன் ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் லிங்கேஸ்வரியின் கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரையும் கைது செய்த பின்புதான் சடலத்தை வாங்குவதாகக் கூறி மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.