முகப்பு
தமிழ்நாடு

அவிநாசி பேரூராட்சிக்கான ஆக்கிரமிப்பு நிலத்தை  மீட்கக் கோரி பொதுமக்கள் முறையீடு

அவிநாசி பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 60 சென்ட் நிலத்தை முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் எனக் கோரி அலுவலரிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:54 PM
ஆக்கிரமப்பில் உள்ள அவிநாசி பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை  மீட்க கோரி பொதுமக்கள் முறையீடு
பகிர்:

அவிநாசி பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 60 சென்ட் நிலத்தை முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் எனக் கோரி அலுவலரிடம் பொதுமக்கள் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசி பேரூராட்சி 3-வது வார்டுக்கு உள்பட்ட நியூ டவுன் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வீட்டுமனை சார்பில் பேரூராட்சி பயன்பாட்டிற்கு (ரிசர்வ்) ஒதுக்கப்பட்ட 60 சென்ட் நிலத்தில் பேரூராட்சி சார்பில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, பொதுமக்கள் பங்களிப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் அந்த நிலத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு என மேல்நிலைத் தொட்டியும் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் இந்த இடத்தை ஒட்டியுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வரும் கழிவுநீர் மேல்நிலை தொட்டி அருகாமையில் விடுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். மேலும், ஒதுக்கப்பட்ட நிலத்திற்குள் தனியார் குடியிருப்பின் 175 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்ட சுற்றுசுவர் அமைத்து தனியார் ஆக்கிமிப்பில் ஈடுபட்டதால் உடனடியாக 60 சென்ட் நிலத்தை உரிய அளவீடு செய்து மீட்டு, பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இருப்பினும் அளவீடு செய்யாமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அளவீடு செய்வதற்காக பேரூராட்சி நிர்வாகத்தினரும், அளவையாளர்களும் சம்பவயிடத்திற்கு வந்திருந்தனர்.

இதையறிந்த பொதுமக்கள், சம்பவ இடத்தில் திரண்டு, முறையாக அளவீடு செய்து நிரந்தத் தீர்வு காண வேண்டும் எனக் கோரி அலுவலர்களிடம் முறையிட்டனர். இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் கூறுகையில், உரிய முறையில் அளவீடு செய்து, ஆக்கிரமிப்பில் இருப்பின் உடனடியாக அகற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →