சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் முதல்வரை விசாரிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 10 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கினை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என ராஜராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உயிரிழந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இருவரின் பிரேதப் பரிசோதனை வருவதற்கு முன்னரே, முதல்வர் இவ்வாறு கூறியுள்ளதால் இந்த சம்பவத்தில் முதல்வரையும் விசாரிக்க வேண்டும் என்று தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதல்வரை விசாரிக்க உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.