முகப்பு
தமிழ்நாடு

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் 30 சதவிகிதம் பணிகள் நிறைவு: முதல்வர் பழனிசாமி தகவல்

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சுமார் 30 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Updated On : 17 ஜூலை, 2020 at 3:04 PM
முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:27 PM

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சுமார் 30 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த்தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: 

Advertisement

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 33 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளன. மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும்பணி தொடங்கியுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் விளைச்சலை அதிகரிக்க 9 கோடி ரூபாயில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் சுமார் 30 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதேபோன்று குடிமராமத்துப் பணிகள் விவசாயிகள் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 

ஈரோடு பவானியாற்றில் 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். கீழ்பவானி கால்வாயை ரூ. 985 கோடியில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

ரூ. 484 கோடியில் ஈரோடு மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. 

ஈரோடு - சித்தோடு 4 வழிச்சாலை திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 'ஊரடங்கு காலத்தில் மின்கட்டண வசூலில் எந்த குளறுபடியும் இல்லை என உயர்நீதிமன்றமே தெரிவித்துள்ளது. 4 மாதத்திற்கான மின் கட்டணம் இரண்டாக பிரித்து வசூலிக்கப்பட்டுள்ளது.

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தலைவரின் சிலை அவமதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. 

இந்தியாவிலேயே கரோனா பரிசோதனை அதிகம் செய்யப்பட்ட மாநிலம் தமிழகம். தொடர்ந்து, மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கரோனா பரவலைத் தடுக்க முடியும்.

தமிழகத்தில் இனி எந்த மாவட்டத்தையும் பிரிக்கும் திட்டம் இல்லை' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.