கூத்தாநல்லூர்: நூலகம் அமைக்கக்கோரி திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றம் வலியுறுத்தல்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கோரையாறு வடக்குத் தெருவில், நூலகம் அமைக்க வலியுறுத்தி, அப்பகுதியின் திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கோரையாறு வடக்குத் தெருவில், நூலகம் அமைக்க வலியுறுத்தி, அப்பகுதியின் திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோரையாறு வடக்குத் தெருவில், அப்பகுதி இளைஞர்களால், கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும், திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் அரவிந்த், செயலாளர் கலைச்செல்வன் கூட்டாகக் கூறியது.
திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றத்தில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அனைவரும் கோரையாறு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர்கள்தான். மன்றத்தில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து, இப்பகுதியில் தூய்மைப் பணிகளைச் செய்து வருகிறோம். நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வைத்துள்ளோம்.
மின்சாரக் கம்பிகள் செல்லும் இடங்களிலோ, பொதுமக்களுக்கு இடையூறாகவோ இருக்கும் மரங்களை எங்கள் மன்றத்தினரே வெட்டி இடையூற்றை அகற்றுவோம். கஜா புயலில், செல்வந்தர்களிடம் பொருளுதவிப் பெற்று, இப்பகுதியின் ஏழ்மையானவர்களுக்கு உதவிகள் செய்துள்ளோம். கரோனாத் தொற்றுக் காலத்தில் அனைவருக்கும் முகக் கவசங்கள் வழங்கினோம். பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கி வருகிறோம்.
இப்பகுதியில், படித்த பட்டதாரிகள், படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் அதிக அளவில் உள்ளனர். போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கான புத்தகங்களைத் தேடி, அலைய வேண்டி உள்ளது. இப்பகுதியிலேயே, ஒரு இடத்தைத் தேர்வு செய்து தருகிறோம். அந்த இடத்தில், மாவட்ட ஆட்சியரின் நேரடிப் பார்வையில், பட்டதாரி மற்றும் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களான எங்களுக்கு, ஒரு நூலகத்திற்கான கட்டடத்தைக் கட்டித் தர முன்வர வேண்டும்.
எங்களது திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில், புத்தகங்களைப் பெற்று நூலகமாக அமைத்துக் கொள்கிறேன். தொலை நோக்குப் பார்வையில், இப்பகுதியில் வாழும் எதிர்கால இளைஞர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட நூலகம் அமைத்துத்தர வேண்டும் எனத் தெரிவித்தனர்.