தாராபுரம் அருகே நாய்கள் கடித்துக் குதறியதில் 15 ஆடுகள் பலி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 15 செம்மறி ஆடுகள் இறந்தன.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 15 செம்மறி ஆடுகள் இறந்தன.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி சீனியப்பன் என்கிற சிவப்பிரகாசம்.
இவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து 26 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டிருந்தார்.
பின்னர் மாலையில் அனைத்து ஆடுகளையும் பட்டியில் அடைத்து விட்டு இரவு வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து, திங்கள்கிழமை அதிகாலையில் சிவபிரகாசம் பட்டிக்குச் சென்றுள்ளார். அப்போது பட்டியில் இருந்து தெருநாய்கள் எட்டிக் குதித்து ஓடியதுடன், நாய்கள் கடித்துக் குதறியதில் 15 ஆடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், 5 ஆடுகள் ரத்தக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. இதுகுறித்து சீனியப்பன் கொடுத்த தகவலின்படி அக்கம்பக்கத்தினர் தடிகளுடன் வந்து தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்த தெருநாய்களை விரட்டியடித்தனர். இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இதுகுறித்து ஆடு வளர்க்கும் விவசாயிகள் கூறியதாவது:
தாராபுரம் சுற்றுப்பகுதியில் போதிய அளவு பருவமழை இல்லாததால் விவதாயம் பொய்த்துப்போயுள்ளது. ஆகவே, பெரும்பாலான விவசாயிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில், ஆடுகளின் பட்டிகளில் தெருநாய்க்கள் கூட்டமாகப் புகுந்து ஆடுகளை வேட்டையாடி வருகிறது. இதனால் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தெருநாய்களைப் பிடித்துக் கொல்ல வேண்டும் அல்லது பலியாகும் கால்நடைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.