சின்னசேலம் பகுதியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் வணிகர்கள் சங்கத்தினர் முழு கடையடைப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சி பகுதியில், மளிகைக் கடை ஊழியர், மருந்துக்கடை ஊழியர்கள் உள்ளிட்ட பலருக்கு அண்மையில், கரோனா தொற்று ஏற்பட்டது.
இதனையடுத்து ஆலோசனை மேற்கொண்ட சின்னசேலம் வணிகர் சங்கத்தினர் வியாழக்கிழமை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை முழு கடையடைப்பு மேற்கொள்வது என முடிவு செய்தனர்.
இதனை அடுத்து வியாழக்கிழமை (ஜூலை 23) சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வழக்கம்போல் மருந்தகம், பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்குகின்றன.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை இந்த முழு கடையடைப்பு தொடரும் என வணிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் சின்னசேலம் பகுதி முழுவதும் கடைகள் மூடப்பட்டு பொதுமக்கள், வாகனங்கள் வரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.