முகப்பு
தமிழ்நாடு

வனத்துறை விசாரணைக்கு சென்ற விவசாயி பலி: முதல்வர் நிவாரணத்தை ஏற்க குடும்பத்தினர் மறுப்பு

வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்ற விவசாயி பலியான சம்பவத்தில் தமிழக முதல்வர் அறிவித்த நிவாரண அறிவிப்பை ஏற்கப் போவதில்லை என முத்துவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
அணைக்கரை முத்துவின் குடும்பத்தினர்
பகிர்:

வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்ற விவசாயி பலியான சம்பவத்தில் தமிழக முதல்வர் அறிவித்த நிவாரண அறிவிப்பை ஏற்கப் போவதில்லை என முத்துவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் அணைக்கரை முத்து(72). விவசாயியான இவர் தோட்டத்தைச் சுற்றிலும் மின் வேலி அமைத்திருந்ததாகக் கூறி கடையம் வனத்துறையினர் புதன்கிழமை இரவு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அணைக்கரை முத்துவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்தார். 

தகவலறிந்த உறவினர்கள்  வனத்துறையினர் தாக்கியதில் அணைக்கரை முத்து இறந்ததாகக் கூறி வியாழக்கிழமை ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்  குற்றவியல் நீதிபதி   விசாரணைக்கு பரிந்துரைத்ததையடுத்து குற்றவியல் நீதிபதி கார்த்திகேயன் விசாரணையில் ஈடுபட்டார். 

மேலும் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நிவாரணமாக 50 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறி இன்று சனிக்கிழமை மூன்றாவது நாளாக உடலை வாங்க மறுத்து வருகின்றனர். 

இந்நிலையில் அணைக்கரைமுத்து குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என தமிழக முதல்வர் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என உயிரிழந்த அணைக்கரை முத்து மகள் வசந்தி தெரிவித்தார். 

மேலும் , “தொடர்ந்து எங்களுக்குத் தெரியாமலேயே உடற்கூறு ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை உடற்கூறு ஆய்வில் உள்ள எந்த ஒரு தகவலும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பேச்சு வார்த்தை நடத்திய போது உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் உடனடியாக தருவதாக தெரிவித்த நிலையில் எங்களுக்கு இதுவரை பிரேத பரிசோதனை குறித்த தகவல்கள் எதுவும் தரப்படவில்லை.

மேலும் வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே அரசு வேலை மற்றும் நிவாரண தொகையை பெற்றுக் கொள்வோம்.” எனக் கூறினார்.


தொடர்ந்து வாகைக்குளம், பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.