தவணைத் தொகை கேட்டுத் துன்புறுத்தும் நுண் கடன் நிறுவனங்களை முற்றுகையிட்ட அரசியல் கட்சியினர்
புதுக்கோட்டையில் பொது முடக்கக் காலத்தில் கடன் தவணைகளை உடனே கட்டச் சொல்லித் துன்புறுத்துவதாக நுண் கடன் நிறுவனங்களின் அலுவலகங்களை அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது முடக்கக் காலத்தில் கடன் தவணைகளை உடனே கட்டச் சொல்லித் துன்புறுத்துவதாக நுண் கடன் நிறுவனங்களின் அலுவலகங்களை அரசியல் கட்சியினர் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுத்த இந்தப் போராட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். நியாஸ் அகமது தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக மாதர் சங்கம், ஆம் ஆத்மி, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சியினரும் இதில் பங்கேற்றனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையும் வருவாய்த் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓரிரு நாட்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து நிதி நிறுவனங்களையும் அழைத்துப் பேசி, பொது முடக்கக் காலத்தில் தவணைத் தொகை, வட்டி, அபராத வட்டி கேட்கக் கூடாது என அறிவுறுத்துவதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.