கரோனாவால் இறக்கும் மின் ஊழியர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஊழியர் சங்கத்தினர் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு வழங்குவது போல கரோனா தொற்றால் இறக்கும் மின்வாரிய ஊழியர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாயை தமிழக அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என மின்வாரிய ஊழியர் சங்கத்தினர் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரோனா சிகப்பு மண்டல பகுதிகளில் 33% ஊழியர்களைச் சுழற்சி முறையில் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும், டிஏ மற்றும் பட்டயம் அல்லாத களப்பிரிவு தொழிலாளிக்கு இணை பொறியாளர் பதவி உயர்வு வழங்கிடுதல், நீதிமன்ற உத்தரவுபடியும், மின்வாரிய விதிகள் படியும் பட்டயம் அல்லாத இணை பொறியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும்,பொறியாளர், அலுவலர்கள், ஊழியர்களுக்கு முகக்கவசம், கையுறை, கை கழுவும் கிருமிநாசினி ஆகியவற்றை வாரியமே மொத்தமாகக் கொள்முதல் செய்து வழங்க வேண்டும்,
கரோனா காலத்தில் பணிக்கு வர முடியாத ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் வழங்க வேண்டும் என்பதோடு கரோனாவால் இறக்கும் மின்வாரிய ஊழியரின் குடும்பத்திற்கு 50 லட்சம் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எளாவூர் இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொன்னேரி கோட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்வில் மின்வாரிய ஊழியர்கள் திரளாகப் பங்கேற்று தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷங்களை எழுப்பினர்.