முகப்பு
தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு 17 முறை கடிதம் எழுதியும் பதில் வரவில்லை: புதுவை முதல்வர் புகார்

புதுச்சேரிக்கு நிவாரணம் வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் பதில் வரவில்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
புதுவை முதல்வர் நாராயணசாமி
பகிர்:

புதுச்சேரிக்கு நிவாரணம் வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் பதில் வரவில்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் இன்று பேசியதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள புதுவைக்கு ரூ.925 கோடி வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு 17 முறை கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால் பிரதமர் மோடியோ மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ இதுவரை பதில் அனுப்பவில்லை.

புதுவையில் கரோனாவை கட்டுப்படுத்த வெண்டிலேட்டர் உள்பட மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டிய தேவை உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் இதுதொடர்பாக பேசி இருக்கிறேன். இந்த கூட்டத்தில் சோனியா காந்தி பேசும்போது மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியதால் ரூ.18 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. அதை மக்களுக்காகப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கரோனா காலகட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்குத் தொடர்ந்து 16 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே இருக்கிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே அவ்வப்போது பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதுவும் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டது. அப்போது கடுமையாக எதிர்த்த பாஜகவினர் இப்போது 16 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வைப் பார்த்து அமைதியாக இருக்கின்றனர்.

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமித்து தற்காலிக கட்டமைப்புகளைக் கட்டி உள்ளது என நேபாளம் வெளிப்படையாக அறிவித்துள்ளது. இது குறித்து சோனியா காந்தி ராகுல் காந்தி ஆகியோர் குரல் கொடுத்தும் இதுவரை பிரதமர் வாய்திறக்க மறுக்கிறார். மோடி அரசு வெளியுறவுக் கொள்கையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. புதுவையில் விரைவில் மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மூன்று மாத காலத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் நாராயணசாமி
 

முழு கட்டுரையைப் படிக்க →