முகப்பு
தமிழ்நாடு

பவானி ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணைகள்: முதல்வர் பழனிசாமி

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காகப் பவானி ஆற்றில் ஐந்து இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

Updated On : 25 ஜூன், 2020 at 7:34 PM
அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகளை பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:20 PM

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காகப் பவானி ஆற்றில் ஐந்து இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திருவாசியில் அத்திக்கடவு - அவிநாசித் திட்டப் பணிகளை வியாழக்கிழமை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பார்வையிட்டார்.

கொங்கு மண்டல மக்களின்  50 ஆண்டு கனவை நிறைவேற்றிட அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தினை நீரேற்று முறையில் ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழக அரசு கடந்த 28. 3.2018 அன்று அரசு ஆணை வழங்கியது அத்திக்கடவு- அவிநாசி பாசனம் நிலத்தடி நீர் செறிவூட்டும் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டமானது ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

Advertisement

பவானி ஆற்றில் காலிங்கராயன் அணைக்கட்டில் கீழ்புறத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு 1.50 டி.எம்.சி. உபரி நீரை நீரேற்று முறையில் நிலத்தடி குழாய் மூலம் கோயமுத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மொத்தம் 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 970 குளம் குட்டைகள் நிரப்பும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப்பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகேயுள்ள திருவாச்சியில் அமைக்கப்பட்டு வரும் நீரேற்று நிலையத்தை பார்வையிட்டார். பின்னர் அந்தப்பகுதி விவசாயிகளுடன் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 
அத்திக்கடவு- அவிநாசி திட்டம் 3 மாவட்ட விவசாய மக்களுக்கு பயன் பெற திட்டம் என்றும் விவசாயிகளின் 50 கால கோரிக்கை தற்போது நிறைவேற்றி உள்ளது.

இத்திட்டத்திற்கு முழுவதுமாக மாநில நிதியிலிருந்து பணம் செலவிடப்பட்டு உள்ளதாகவும், 2021 டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் இதற்காக இரவு பகலாக பணிகள் நடைபெற்றது வருகிறது என்றார்.

பின்னர் விவசாயிகளுடன் பேசிய முதல்வர் பழனிசாமி, விவசாயிகளின் கனவுத் திட்டமான இத்திட்டம் 1,652 கோடி ரூபாய் மாநில நிதியிலிருந்து வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 24 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.

தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன என்றார். நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்துவதற்காக பவானி ஆற்றில் ஐந்து இடத்தில் அணை கட்ட இருக்கின்றோம். மேலும், பவானி ஆற்றில் ஐந்து இடத்தில் தடுப்பணை கட்டுவதற்கு அரசு பரிசீலனையில் இருக்கிறது. துரிதமாக அந்த பணிகள் நடைபெறும். மழைக்காலங்களில் பெய்யும் உபரி நீர் வீணாகி வருகிறது.

இந்த நீரை ஆங்காங்கே தேக்கி வைத்து நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. குடிமராமத்துத் திட்டம் விவசாயிகளின் கனவுத் திட்டமாகும். 1,433 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுப்பணித் துறை ஏரிகள் முழுக்க முழுக்க விவசாயிகள் பங்களிப்புடன் நிறைவேற்றி கொண்டிருக்கின்றோம். இதற்கு டெண்டர் விடப்படுவது இல்லை.

விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பாசன ஆயக்கட்டுதாரர்களை வைத்து இந்த பணிகள் நடைபெறுகின்றன. ஏரிகளை தூர்வாரி அதன் மூலமாக அதில் அள்ளப்படும் வண்டல் மண் விவசாய நிலத்திற்கு இயற்கை உரமாக பயன்படுகிறது. ஏரி ஆழம் ஆகிறது. இரண்டு வகையில் பயன் கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கிறது. நிலத்தடி நீர் உயர்ந்து குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு 11 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது. குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டதால் காவிரி நீர் குறிப்பிட்ட காலத்தில் கடை மடைக்கு தண்ணீர் போய் சேர்ந்துள்ளது அவர்கள் குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்ய முடியும் என்றார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.வி. ராமலிங்கம். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு, பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு என்.டி வெங்கடாசலம், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்ரமணியம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.