கரோனா பிரச்னை காரணமாக தஞ்சாவூர் பெரியகோயில் இன்று முதல் மூடப்படுகிறது.
கரோனா பிரச்னை தொடர்பாக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி உள்ள சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சுற்றுலாத் தலமாக உள்ள வரலாற்று நினைவுச் சின்னங்களையும் மூட வேண்டும் என இந்திய தொல்லியல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கான உத்தரவு தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்துள்ளது. என்றாலும் கோயிலுக்கு இன்று காலை பக்தர்கள் பலர் வந்தனர். பக்தர்கள் வலியுறுத்தலின் பேரில் 11 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து கோயில் முகப்பு கதவு மூடப்பட்டது.
மேலும் மார்ச் 31-ம் தேதி வரை கோயில் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு பதாகை வாயில் கதவில் வைக்கப்பட்டுள்ளது.