மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது! ராமதாஸ்
மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பற்காக விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பற்காக விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், நெய்வேலியில் மூன்றாவது சுரங்கத்திற்காக அப்பகுதி மக்களின் வீடுகள் மற்றும் நிலங்களை மிரட்டிப் பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் முயற்சி பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தால் முறியடிக்கப் பட்ட நிலையில், அந்த நிலங்களை பறிக்கும் முயற்சியை என்.எல்.சி மீண்டும் தொடங்கியுள்ளது. அப்பாவி ஏழை மக்களுக்கு ஆசை காட்டி ஏமாற்றி நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி கண்டிக்கத்தக்கதாகும்.
இதற்கெல்லாம் மேலாக விவசாயத்தை அழித்து, மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எந்தத் தேவையும் இல்லை. ஏனெனில், இரண்டாவது சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கர் நிலங்கள் இன்னும் பயன்படுத்தபடவில்லை. 1985-ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இன்னும் சுரங்கம் அமைக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது, இப்போது இன்னும் கூடுதலாக நிலங்களை கைப்பற்றி விவசாயத்தை அழிக்க என்.எல்.சி துடிப்பதை அனுமதிக்க முடியாது.
எனவே, யாருக்கும் தேவையில்லாத, வேளாண்மைக்கும், இயற்கைக்கும் எதிரான மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டத்தை என்.எல்.சி கைவிட வேண்டும். இந்த விஷயத்தில் மக்களின் உணர்வுகளை என்.எல்.சி நிறுவனத்திற்கு எடுத்துக் கூறி, இந்தத் திட்டத்தை கைவிடும்படி தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.