திருப்பூரில் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்
திருப்பரில் காய்கறி வாங்கவும், இறைச்சி வாங்கவும் பொதுமக்கள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் கூட்டமாக ஞாயிற்றுக்கிழமை திரண்டனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல்
திருப்பரில் காய்கறி வாங்கவும், இறைச்சி வாங்கவும் பொதுமக்கள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் கூட்டமாக ஞாயிற்றுக்கிழமை திரண்டனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி ஊழியர்கள் திணறினர்.
கரோனா நோய்தொற்றைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.எனினும் காய்கறி, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விதிமுறைகளைப் பின்பற்றி வாங்கிச் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள சந்தைப்பேட்டையில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி, இறைச்சி வாங்க அதிக அளவில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே திரண்டனர்.
இதில், பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளி இல்லாமல் கடைகளில் திரண்டனர். மேலும், கட்டத்துக்குள் ஒவ்வொருவராக வரிசையாக நிற்காமல் கும்பலாக கடைகளில் குவிந்தனர். இதனால் கடை உரிமையாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களும், காவல் துறையினரும் திணறினர்.
மேலும், இரு சக்கரத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தென்னம்பாளையம் பகுதியில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் சந்தைபேட்டைக்குள் நுழைய தற்காலிகமாகத் தடை விதித்தனர்.
அதே போல், திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் இரு சக்கர வாகனங்களில் சுற்றிவந்தனர். இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதற்கான நோக்கமே கேள்விக்குறியாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆகவே, அரசின் உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து அத்தியாவசியம் இல்லாமல் வெளியில் சுற்றுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.