கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவால் 6 ஆயிரம் கட்டுமானத் தொழில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியது:
"உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தாக்குதல் என்பது, உலகப் போரில் மக்களுக்கு ஏற்பட்ட தாக்குதலை விட, படுமோசமாக உள்ளது. கரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தினமும் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தக் கூடிய, கட்டுமானம் மற்றும் அமைப்பு சாராத் தொழில் செய்யக் கூடிய தொழிலாளர்கள் என திருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர். 144 தடை உத்தரவால், இவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதில், நேரடியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளனர். இவர்கள் ஜீவாதாரப் பிரச்னைக்கே எந்த வழியும் இல்லாமல் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கின்றனர். தடை உத்தரவு போடப்பட்ட 5 நாட்களிலேயே பெரும் கஷ்டத்தில் இருப்பவர்கள், மீதியுள்ள நாட்களை எப்படி போக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. கட்டுமானத் தொழிலாளர்களின் நிலையை நினைத்தால் பெரும் அச்சமாக உள்ளது.
தமிழக அரசு கட்டடத் தொழிலாளர்களுக்கென்று பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டும், தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக, ஆயிரம் பணமும், 15 கிலோ அரிசி, ஒரு கிலோ து. பருப்பு, சமையல் எண்ணெய் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த மாவட்டத்தில் உள்ள கட்டடத் தொழிலாளர்கள் அனைவரும் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யாதவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழக அரசு ரூ.5 ஆயிரம், 5 கிலோ து. பருப்பு, 5 கிலோ சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தையும், கட்டமைப்பையும் உடனடியாக உயர்த்தக் கூடியது கட்டுமானத் தொழில்தான். இத்தொழிலைக் காக்கக் கூடிய தொழிலாளர்களை உடனடியாக தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்" என ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.