முகப்பு
தமிழ்நாடு

நாமக்கல்லில் 1,500 லாரி ஓட்டுநர்களுக்கு கபசுரக் குடிநீர் பொட்டலம்

நாமக்கல் மாவட்டத்தில் 14 சோதனைச் சாவடிகளில் 1,500 லாரி ஓட்டுநர்களுக்கு கபசுரக் குடிநீர் மருந்து பொட்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் 14 சோதனைச் சாவடிகளில் 1,500 லாரி ஓட்டுநர்களுக்கு கபசுரக் குடிநீர் மருந்து பொட்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோய் தொற்று பரவலை எதிர்கொள்ள எதிர்ப்பு சக்தி மிக்க சித்த மருத்துவ முறையிலான மருந்துகளை முன்னெச்சரிக்கையாக வழங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, சளி, காய்ச்சலைப் போக்கும் கபசுரக் குடிநீர் மருந்து, ஜிங்க் சல்பேட், வைட்டமின் சி மாத்திரைகள், ஆரோக்யாஅஸ்பரிசம் ஆகியவை கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக பொதுமக்களுக்கும், தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கும், சுகாதாரத் துறையினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை ஆய்வு என்ற அடிப்படையில், இந்த எதிர்ப்பு சக்தி மருந்துகளை வழங்கலாமா, கூடாதா என்ற விவாதத்துடன் நாள்கள் சென்று கொண்டிருந்தது. 

தற்போது அதற்கான முழு அனுமதியை மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளதால், தமிழ்நாடு சித்த மருத்துவ கழககத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, மாத்திரைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில், ஏற்கெனவே 21 கரோனா தடுப்பு கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அந்தந்த பகுதி நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், அரசுத் துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 14 சோதனைச் சாவடிகளிலும் லாரி ஓட்டுநர்கள், அவர்களது குடும்பத்தினர் நோய் தொற்றால் பாதிப்படையாத வகையிலும் 15 நாள்களுக்கு தேவையான கபசுரக் குடிநீர், ஆரோக்ய அஸ்பரிசம், ஜிங்க் சல்பேட் போன்றவை பொட்டலங்களாக கட்டப்பட்டு வழங்கப்பட உள்ளது. 

எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து நாமக்கல் அரசு சித்த மருத்துவர் பூபதிராஜா கூறியது;கரோனா நோய் பரவல் தடுப்பில் சித்த மருத்துவத்தின் பங்கு இன்றியமையாததாக அமையும். சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், லாரி ஓட்டுநர்கள் இத்தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் சூழல் உள்ளதால், அவர்களும், குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் 15 நாள்களுக்கு கபசுரக் குடிநீர் பொட்டலங்களை விநியோகிக்க அறிவுறுத்தினார். இதற்கான மருந்து பொட்டலங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் ஆலத்தூரில் இருந்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 1500 பொட்டலங்களை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் கட்டமாக 500 பொட்டலங்கள் தனித்தனி மருந்து பொட்டலங்களை செவிலியர்கள் மூலம் தயார் செய்துள்ளோம். இவை அந்தந்த சோதனைச் சாவடி பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே தூய்மைப் பணியாளர்கள், அரசு பணியாளர்கள், கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள பொதுமக்களுக்கு விநியோகித்துள்ளோம். தேவைப்படும்பட்சத்தில் கூடுதல் மருந்து பொட்டலங்களை விநியோகிக்கவும் தயாராக உள்ளோம் என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →