கிருஷ்ணா நுழைவாயிலைத் திறப்பது குறித்து முடிவெடுக்க சென்னை ஐஐடிக்கு உத்தரவு
வேளச்சேரியில் மூடப்பட்டுள்ள கிருஷ்ணா நுழைவுவாயிலைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை 4 வாரத்தில் பரிசீலித்து முடிவு எடுக்க சென்னை ஐஐடி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேளச்சேரியில் மூடப்பட்டுள்ள கிருஷ்ணா நுழைவுவாயிலைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை 4 வாரத்தில் பரிசீலித்து முடிவு எடுக்க சென்னை ஐஐடி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னை ஐஐடி வளாகத்துக்கு வேளச்சேரியிலிருந்து வந்து செல்பவர்கள் பயன்படுத்துவதற்காக கிருஷ்ணா நுழைவுவாயில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நுழைவுவாயிலைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடி, ஐஐடி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நுழைவுவாயில் மூடப்பட்டதால், ஐஐடி வந்து செல்பவர்களும், அங்கு அமைந்துள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு வந்துசெல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுவதால் வேளச்சேரி பக்கம் உள்ள கிருஷ்ணா நுழைவுவாயிலைத் திறக்க ஐஐடி-க்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஐடி நிர்வாகம் தரப்பில், கிருஷ்ணா நுழைவு வாயில் அருகே மாணவிகள் விடுதி உள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு கருதிதான் அந்த நுழைவுவாயில் மூடப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நுழைவு வாயிலைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தென்சென்னை எம்.பி., மற்றும் மனுதாரர் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு மனு அனுப்பியுள்ளனர். ஆனால், சென்னை ஐஐடி-க்கு மனு அனுப்பவில்லை. எனவே , மனுதாரர் சென்னை ஐஐடி-க்கு இரண்டு வாரத்தில் புதிதாக மனு அனுப்ப வேண்டும். அந்த மனுவின் மீது ஐஐடி நிர்வாகம் 4 வாரத்தில் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.