முகப்பு
தமிழ்நாடு

திறக்கப்படாத திருக்கழிப்பாலை ஊராட்சி அலுவலகம்: மக்கள் போராட்டம்

சிதம்பரம் அருகே திருக்கழிப்பாலை ஊராட்சி அலுவலகம் திறக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 6 நவம்பர், 2020 at 7:00 PM
பொதுமக்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட திருக்கழிப்பாலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:18 PM

சிதம்பரம் அருகே திருக்கழிப்பாலை ஊராட்சி அலுவலகம் திறக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சிதம்பரம் அருகே உள்ளது கீழ திருக்கழிப்பாலை ஊராட்சி. இந்த ஊராட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சுபாஷினி விமல்ராஜ் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊராட்சி மன்ற துணைத் தலைவராக ராமலிங்கம் என்ற லட்சுமணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பொறுப்பேற்ற முதல் ஊராட்சி மன்றத் தலைவி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது.

மேலும், ஊராட்சி செயலாளர் மணி என்பவரும் ஊராட்சி அலுவலகத்தை திறப்பதில்லை என தெரிகிறது. இந்த நிலையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லட்சுமணன் இன்று அப்பகுதி பொதுமக்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இதுகுறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லட்சுமணன் கூறுகையில், தேர்தலில் வெற்றி பெற்ற நாளிலிருந்து இதுவரை ஊராட்சி மன்றத் தலைவி சுபாஷினி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருவதில்லை எனவும் அவருக்குப் பதிலாக அவரது கணவர் விமல்ராஜ் நிர்வாகத்தை கவனித்து வருவதாகவும் குற்றம்சாட்டிய லக்ஷ்மணன், எங்கள் ஊராட்சியில் மூன்று கிராமங்கள் உள்ளன .இதில் வீரன்கோவில் திட்டு கிராமப் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை எனவும் முக்கியமாக குடிநீர் பிரச்னை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளரை சந்திக்க வேண்டுமென்றால் கடினமான சூழல் உள்ளதாகவும் தெரிவித்த அவர் வீட்டு வரி ரசீது வாங்கவேண்டும் என்றால் கூட அவர்களை தேடிச் செல்லும் ஒரு அவலநிலை உள்ளது. 

மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத் தலைவர் பெயர் எழுதப்பட்ட பதாகை அப்படியே உள்ளது என்றும் பூட்டிய பூட்டு இதுவரை திறக்காத நிலை உள்ளதால் கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. ஆகவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக கிராம மக்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.