சென்னை: திருத்தணி முருகன் கோவில் தங்கும் விடுதிகளை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருத்தணியைச் சேர்ந்த ஹர்ஷவர்த்தன் தவ்லூர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த கோவிலுக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளில், விபசாரம், மது அருந்துதல், அசைவம் உண்ணுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
கரோனா பொதுமுடக்க காலத்தில் கோவில் ஊழியர்களான பெரியகார்த்தி, குப்பன் ஆகியோர் கோவிலுக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளை, இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். அந்த இருவர் மீதும் கோவிலின் இணை ஆணையர் பழனிகுமார், அறங்காவலர் ஜெய்சங்கர் ஆகியோர் நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். எனவே இவர்களுக்கு எதிராக சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுத்து கோவிலின் புனிதத்தை காக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.