முகப்பு
தமிழ்நாடு

மெரீனா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை மெரீனா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பீட்டர்ராயன் என்பவர் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நாள்தோறும் ரூ. 500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மெரீனா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகர்- லூப் சாலையை புணரமைப்பது, மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது மெரீனா கடற்கரையில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும், மெரீனா கடற்கரையைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதற்காக சென்னை மாநகர காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். நீதிபதிகளும் மெரீனாவில் நடைபயிற்சி மேற்கொண்டால் எல்லாம் சரியாகும் என கருத்து தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர், மெரீனாவை சுத்தப்படுத்துவதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். லூப் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை மாநகராட்சி ஆணையரும், காவல் ஆணையரும் மெரீனாவில் திடீர் சோதனைகள் நடத்தினர். மெரீனா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகளுக்கான ஒப்பந்தப்புள்ளியைத் திறக்க தனி நீதிபதி தடை விதித்துள்ளதால் அந்த ஒப்பந்தப்புள்ளியைத் திறக்க இயலவில்லை என தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ள வழக்கை, இந்த வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பின்னர், பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மெரீனா கடற்கரை பொதுமக்களுக்கு எப்போது திறக்கப்படும் கேள்வி எழுப்பினார்.

அப்போது அரசுத் தரப்பில், நவம்பர் இறுதி வரை மெரீனாவை திறக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு, திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளநிலையில், மெரீனா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு முடிவு எடுக்காவிட்டால், நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →