மதுரை தீ விபத்து: பலியான வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
மதுரை தீ விபத்தில் உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை: மதுரை தீ விபத்தில் உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை தெற்குமாசி வீதியில் விளக்குத்தூண் அருகே பாபுலால் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியைத் தொடங்கினர். அப்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
இடிபாடுகளில் சிக்கிய 4 வீரர்களில் படுகாயமடைந்த சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கல்யான்குமார், சின்னக்கருப்பு ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, இருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதாவது முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சமும், அரசு நிதியில் இருந்து தலா ரூ.15 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பணியின் போது காயமடைந்த கல்யான்குமார், சின்னக்கருப்பு ஆகிய இரு வீரர்களும் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன். காயமடைந்த இருவருக்கும் ரூ.3 லட்சம் வழங்கப்படும். அவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.