ஸ்டாலினை கிண்டல் செய்து மீண்டும் சுவரொட்டி: அகற்றிய திமுகவினர்
கோவையில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து மீண்டும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை கிழித்து திமுகவினர் அகற்றினர்.
கோவையில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து மீண்டும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை கிழித்து திமுகவினர் அகற்றினர்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினும், அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இரண்டு கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளை சமூக வலைதளங்கள் மூலமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை காந்திபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில் மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து ரயில் நிலையம், டவுன் ஹால், லங்கா கார்னர் உள்ளிட்ட இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி படங்களுடன் ஊரடங்கில் அயராது உழைத்தவரா? விக் மாட்டியவரா? எனவும், மற்றொரு சுவரொட்டியில் விவசாயிகளுக்காக டெல்டாவை பாதுகாத்த முதல்வரா? மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் கையெழுத்திட்டவரா? எனவும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டலடிக்கும் வகையிலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேசமயம் எந்த அமைப்பின் சார்பாக ஒட்டப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் சுவரொட்டியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில், டவுன் ஹால் பகுதியில் ஒட்டப்பட்டு இருந்த இந்த சுவரொட்டிகளை திமுகவினர் கிழித்து அகற்றினர்.
ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டல் செய்து கோவையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் அதேபோன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.