சென்னையில் புயல் பாதிப்பு குறித்து புகாரளிக்க உதவி எண்கள்
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் நாளை பிற்பகலில் கரையைக் கடக்கவிருக்கும் நிலையில், புயல் பாதிப்பு குறித்து புகாரளிக்க அவசர உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் நாளை பிற்பகலில் கரையைக் கடக்கவிருக்கும் நிலையில், புயல் பாதிப்பு குறித்து புகாரளிக்க அவசர உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
"நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913, 044-2538 4530, 044-2538 4540 ஆகிய எண்களில் புகாரளிக்கலாம்" என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. புயல் எச்சரிக்கைக் கூண்டு என்றால் என்ன? எதன் அடிப்படையில் ஏற்றப்படுகின்றன?
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கன மழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும், தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது இன்று காலை புயலாக வலுவடைந்தது. மேலும், இந்தப் புயல் தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நவம்பா் 25-ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கவுள்ளது. அப்போது, மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.