செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
நிவர் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால் நண்பகல் 12 மணிக்கு ஏரியிலிருந்து 1,000 கன அடி நீர் திறந்து விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குன்றத்தூர், நத்தம், காவலூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம், வழுதியம்பேடு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோன்று அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் 20 செ.மீ. வரை மழை பெய்யக் கூடும் என மத்திய நீர்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.