விராலிமலை: அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு காளை உள்பட 3 கறவை பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததை அடுத்து ஊரே திரண்டதால் பரபரப்பு நிலவியது.
அன்னவாசல் அருகேயுள்ள கா.தெற்கிக்களம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி மூக்காயி இவர்கள் மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். வீட்டில் 7 க்கும் மேற்பட்ட பசு மற்றும் காளை மாடுகள் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 7 பசு மற்றும் காளை மாடுகளை மேய்சலுக்காக மூக்காயி அவிழ்த்துவிட்டு மீண்டும் மாலை அவற்றை வீட்டுக்கு ஓட்டி வந்துள்ளார். பின்னர் முதலில் தண்ணீர் தொட்டியில் ஜல்லிக்கட்டு காளைக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். அந்த ஜல்லிக்கட்டு காளை தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் மயங்கி துடிதுடித்து இறந்தது.
பின்னர், மூக்காயி உறவினர்கள் இறப்புக்காண காரணம் தெரியாமல் உடநலக்குறைவு காரணமாக உயிரிழந்திருக்ககூடும் என்று ஜல்லிக்கட்டு காளையை அடக்கம் செய்தனர்.
இறந்த ஜல்லிக்கட்டு காளை அடக்கம் செய்யப்பட்டபோது.
பின்பு சிறிது நேரத்தில் தண்ணீர் குடித்த மற்ற நான்கு பசுக்களும் அடுத்தடுத்து துடிதுடித்து உயிருக்கு போராடியுள்ளது. தொடர்ந்து இரண்டு பசுக்கள் அடுத்தடுத்து துடிதுடித்து இறந்துள்ளது
மற்ற இரண்டு பசுக்கள் கவலைகிடமாக உள்ளது. அதன் பின்னர் மூக்காயி குடும்பத்தினருக்கு சந்தேகம் வரவே இதுகுறித்து அன்னவாசல் காவல்துறையினருக்கும், வீரப்பட்டி வருவாய் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
இதற்கிடையில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் பசுக்கள் இறந்த தகவல் அறித்து சுற்றுவட்டார பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இறந்த பசுக்களை பார்த்து மூக்காயி கதறி அழுத சம்பவம் அனைவரின் மனதையும் உளுக்கியது.