ஆம்பூர் அருகே உள்ள நரியம்பட்டில் அரசினர் சமுதாய சுகாதார மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையைச் சுற்றி அடர்ந்த செடி கொடிகள் படர்ந்து புதர்போல மண்டி உள்ளது. இந்த மருத்துவமனைக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் பிரசவம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், செவ்வாய்கிழமை இரவு சுமார் பத்து மணிக்கு மருத்துவமனையில் பெரிய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை மருத்துவமனைக்கு வந்த ஊழியர்கள் சிலர் பார்த்துள்ளனர். அவர்கள் உடனடியாக உமராபாத் காவல் நிலையத்திற்கும் ஆம்பூர் வனசரகர் மூர்த்திக்கும் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வனக் காப்பாளர்கள் ராஜ்குமார் சுல்தான் உள்ளிட்டோர் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் சேர்ந்து நீண்ட நேரம் போராடி அந்த 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்தனர்.
பின்னர் பிடிப்பட்ட அந்த மலைப்பாம்பை சின்னவரிக்கம் ஊராட்சி பெங்களமூலை வனப்பகுதியில் விட்டனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் மலைப்பாம்புகள் பிடிபடுவது அதிகரித்து வந்துள்ளது.
எனவே நரியம்பட்டு அரசினர் சமுதாய சுகாதார வளாகம் மற்றும் மருத்துவ மனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் செடிகொடிகள் மற்றும் புதர்களை அகற்றி சுகாதார வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.