கடலூர் சுதந்திர போராட்ட தியாகி காலமானார்
கடலூரைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி காலமானார். அவருக்கு வயது 92.
கடலூர்: கடலூரைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி காலமானார். அவருக்கு வயது 92.
கடலூர் முதுநகர் சுண்ணாம்புகார வீதியைச் சேர்ந்தவர் தியாகி அஞ்சலையம்மாள். 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். காந்தியடிகளால் தென்னாட்டு ஜான்சிராணி என்றழைக்கப்பட்டவர். இவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது 1930 ஜுலை மாதம் ஜெயில்வீரன் என்ற ஜெயவீரன் (92) பிறந்தார். இவரும் விடுதலை போராட்டத்தில் பங்கேற்று வெவ்வேறு காலகட்டங்களில் 5 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.
இவரது சொந்த கிராமமான புவனகிரி அருகிலுள்ள தீத்தாம்பாளையத்தில் புதன்கிழமை இரவில் வயது மூப்பு காரணமாக இறந்தார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவரது தந்தை முருகபடையாட்சியாரும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். அஞ்சலையம்மாள் தியாகிகளுக்கான ஓய்வூதியம் பெற மறுத்த நிலையில், ஜெயில் வீரனும் தியாகிகளுக்கான ஓய்வூதியம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இறுதி மரியாதை சடங்கு தீத்தாம்பாளையத்தில் இன்று மாலையில் நடக்கிறது. இவர் கடந்த 2 ஆம் தேதி கடலூரில் பாரதிதாசன் இலக்கிய நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலையம்மாள் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.