திருப்புவனத்தில் ஊரக மின்சப்ளை, நகர்ப்பகுதியுடன் இணைப்பு: அடிக்கல் நாட்டினார் அமைச்சர் ஜி.பாஸ்கரன்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஊரக மின்சப்ளை நகர் பகுதி மின்சப்ளையுடன் இணைப்புக்கான திட்ட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஊரக மின்சப்ளை, நகர் பகுதி மின்சப்ளையுடன் இணைப்புக்கான திட்ட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்புவனம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த 16, 17 வார்டுகளில் உள்ள மின் இணைப்புகளுக்கு ஊரக மின்விநியோகப் பிரிவு மூலம் மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை, மழை பெய்தால் மின்தடை ஏற்பட்டு பல மணி நேரம் மின்சப்ளை கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் சந்தித்து வந்தனர். இதனால் மேற்கண்ட பகுதி மின் இணைப்பை நகர் பகுதி மின் பகிர்மானத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.
இதையடுத்து தற்போது திருப்புவனம் பேரூராட்சி 16,17 வார்டுகளின் மின் இணைப்புகளை ஊரக பகுதி மின் பகிர்மானத்திலிருந்து பிரித்து நகர்ப்பகுதி பகிர்மானத்துடன் இணைக்கும் திட்டத்துக்கு ரூ. 48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக காதி கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் கலந்து கொண்டு திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டிப் பேசியதாவது:
மானாமதுரை தொகுதியில் இடைத்தேர்தலில் உறுதியளித்தபடி ஒவ்வொரு திட்டங்களாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. விரைவில் மானாமதுரை வைகையாற்றுக்குள் தரைப்பாலம், திருப்புவனத்தில் புதிய பஸ் நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படவுள்ளது. திருப்புவனம் பகுதியில் நடக்கும் வளர்ச்சிப் பணிகளை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர். மக்கள் எப்போதும் அதிமுக அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றார்.
இவ்விழாவில் முன்னாள் மக்களவை உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் கே.கே.பாலசுப்ரமணியம், சமூக ஆர்வலர் அயோத்தி, மானாமதுரை அதிமுக ஒன்றியச் செயலாளர் சிவ சிவ ஸ்ரீதரன், திருப்புவனம் ஒன்றிய நிர்வாகிகள், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.