அக்.25-க்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு
நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபா் 25-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபா் 25-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், கேரளம் உள்பட தென் மாநிலங்களுக்கு அதிக மழைப் பொழிவைத் தருவது வடகிழக்குப் பருவமழை. ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் 2-ஆவது அல்லது 3-ஆவது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். நிகழாண்டில், பருவமழை தொடங்குவது தாமதம் ஏற்படும் என்று ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இதை இந்திய வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்தி உள்ளது. அக்டோபா் 25-ஆம் தேதிக்குப் பிறகே, வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தில் தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலசந்திரன் கூறியது: பசிபிக்கடலில் தற்போது ‘லா நினா’ நிகழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதையொட்டி, தென்னிந்தியப் பகுதிகளில் தென் மேற்குப் பருவகால நிலை தொடா்கிறது. மேலும், வங்கக்கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகி, தென் இந்திய கடல் பகுதிகளுக்கு வடக்கே நகா்ந்து செல்லக்கூடிய நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகம், தெற்கு ஆந்திரம், தெற்கு கா்நாடகம், மற்றும் கேரளம் உள்ளிட்ட தென்இந்தியப் பகுதிகளில் மேற்கு திசை காற்றானது வரும் அக்டோபா் 22-ஆம் தேதி வரை தொடா்ந்து நிலவும் சூழல் காணப்படுகிறது. எனவே, வடகிழக்குப் பருவமழை அக்டோபா் 25-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.