பதவிக்காக பாஜகவில் சேரவில்லை: குஷ்பு
நான் பதவிக்காகவோ, பேரம் பேசியோ பாஜகவில் சேரவில்லை என நடிகை குஷ்பு தெரிவித்தார்.
நான் பதவிக்காகவோ, பேரம் பேசியோ பாஜகவில் சேரவில்லை என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸிலிருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு இன்று காலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் பாஜக சார்பில் அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர் கமலாலயத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நீண்ட யோசனைக்குப் பின்னரே நான் பாஜகவில் இணைந்துள்ளேன். நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால், பாஜக ஆட்சி அமைக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எனது கொள்கை.
இன்றும் நான் பெரியாரின் கொள்கைவாதி தான். பெரியார் பெண்களுக்காக குரல் கொடுத்தவர். அதைத் தான் நான் விரும்புகிறேன். ஆனால், அவருடைய அனைத்துக் கருத்துக்களையும் நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். பெரியார் என்றால் அரசியல் பேசக்கூடாது. ஆனால் திமுக அரசியல் பேசுகிறது.
எதிர்க்கட்சியில் இருக்கும்போது அதற்கான வேலையைத் தான் செய்ய வேண்டும். ஆளும்கட்சியை எதிர்த்துதான் ஆக வேண்டும். அந்த வேலையைத் தான் செய்தேன். ஆனால், அதற்காக ஆளும்கட்சி செய்த எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஓரிடத்தில் இருக்கும் வரை அந்த இடத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். பாஜக நிறைவேற்றிய அனைத்து திட்டங்களையும் தொடங்கியது காங்கிரஸ் தான்.
நான் பதவிக்காக பாஜகவுக்கு வரவில்லை. தமிழகத்தில் பாஜகவில் எனக்கு முன்னோடிகள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள்.
அதுமட்டுமின்றி எனது கணவர் சுந்தர் சி கூறியெல்லாம் நான் பாஜகவில் சேரவில்லை என்றார்.