தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
தென் மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்
இரணியல், பெரியாறு 5 செ.மீ மழையும், சித்தார், குளச்சல் தலா 4 செ.மீ மழையும், வால்பாறை, சின்னக்கல்லார், சுரலாக்கோடு, பாபநாசம், பேச்சிப்பாறை 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.