கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் பாரதிய ஜனதா கட்சி செயற்குழு கூட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பத்தில் நகர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் பி.ஈஸ்வரன் தலைமை வகித்தார், நகர பொதுச்செயலாளர் எஸ்.பழனிக்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
கம்பம் நகருக்கு ரயில் போக்குவரத்து இதுவரை இல்லை. எனவே, உள்ளூர் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் மத்திய ரயில்வே அமைச்சகம் கம்பம் நகருக்கு ரயில்வே போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும்.
கம்பத்தில் உள்ள வீரப்ப நாயக்கர் குளத்தில் முறையில்லாமல் சாக்கடை நீர் கலந்து தற்போது குளத்தில் நீர்நிலை மாசுபாடு அபாயகரமான சூழ்நிலையை எட்டியுள்ளது. அதனை பொதுப்பணித் துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு சீர்படுத்த வேண்டும்.
மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாநில அரசு உடனடியாக அரசு கலைக் கல்லூரியை கம்பத்தில் தொடங்க வேண்டும்.
மணிகட்டி ஆலமரச்சாலை மற்றும் நந்தனார் காலனியில், நகராட்சி நிர்வாகம் சார்பில் பெண்கள் பொதுக்கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.
ரேஞ்சர் ஆபீஸ் ரோடு மற்றும் கக்கன் காலனியில் நகராட்சி நிர்வாகம் சார்பில், கழிவுநீர் வடிகால் சாக்கடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
செயற்குழுக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வனப்பேச்சி, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.