சேலத்தில் மழை: அருவிகளில் தண்ணீர்
சேலத்தில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது.
சேலம்: சேலத்தில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது.
ஏற்காடு மலைப் பாதையில் ஆங்காங்கே சிற்றருவிகள் ஏற்பட்டுள்ளன. ஏற்காடு மலைப் பகுதி பனிமூட்டமாகக் காணப்படுகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இதனிடையே சேலம் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் சேலத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு மழை பெய்தது. சேலம் நகரில் சுமார் 87 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
நகரில் தாழ்வான பகுதிகளான கிச்சிப்பாளையம் நாராயண நகர், ராஜா பிள்ளைகாடு, அரிசிபாளையம் தெப்பக்குளம், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
அம்மாபேட்டை பகுதியில் ராஜவாய்க்கல் கால்வாயில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது. பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் திருமணிமுத்தாறில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.