திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
திருப்பூரில் மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் ஊதியத்தை வழங்கக்கோரி புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் ஊதியத்தை வழங்கக்கோரி புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் 700க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பணியாளர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஊதியத்தை அக்டோபர் 20 ஆம் தேதி வரையில் வழங்கப்படவில்லை.
இதையடுத்து, திருப்பூர் மாநகராட்சி முன்பாக 150க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ ஊராக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரங்கராஜ் தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்றவர்கள் செப்டம்பர் மாதத்துக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், புதன்கிழமை மாலைக்குள் அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதன் பேரில் போராட்டத்தைக் கைவிட்ட தூய்மைப் பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.