குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, சுசீந்திரம், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், புதுக்கடை, குளச்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனெவே கடந்த 10 நாள்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகளில் கணிசமான அளவிற்கு தண்ணீர் நிரம்பிய நிலையில் உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வெயில் சுட்டெரித்தது. பகல் 11.45 மணியளவில் மேகம் கறுத்து மழை பொழியத் தொடங்கியது.
தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நாகர்கோவில் மாநகரில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டாறு, வடசேரி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் திரண்டு ஓடியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகின்றது.