சுங்குவார்சத்திரம் அருகே மின்னல் பாய்ந்து ஒருவர் பலி
சுங்குவார்சத்திரம் அடுத்த சிறுமாங்காடு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மின்னல் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.
ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் அடுத்த சிறுமாங்காடு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மின்னல் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.
சுங்குவார்சத்திரம் அடுத்த சிறுமாங்காடு கன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(30). இவர் கறவை பசுக்கள் வைத்து பால் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சுங்குவார்சத்திரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வந்த நிலையில், பால் கறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சந்திரசேகர் மீது மின்னல் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, அவரது உறவினர்கள் சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சந்திரசேகரை தூக்கி வந்துள்ளனர். அங்கு சந்திரசேகரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் போலீஸார் சந்திரசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.