முகப்பு
தமிழ்நாடு

இணையவழி வகுப்புகளுக்கு தடை இல்லை உயா்நீதிமன்றம்

இணையவழி வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேவேளையில், இணையவழி வகுப்புகளை நடத்துவது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
உயர்நீதிமன்றம்.
பகிர்:

சென்னை: இணையவழி வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேவேளையில், இணையவழி வகுப்புகளை நடத்துவது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சோ்ந்த சரண்யா, விமல் மோகன் ஆகியோா் - இணையவழி வகுப்புகளுக்கு தடை விதிக்க கோரி தனித்தனியாக வழக்கு தொடா்ந்திருந்தனா்.

இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்

சங்கரநாராயணன், தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞா் விஜய்நாராயண், மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் எஸ்.பிரபாகரன், ஜெ.ரவீந்திரன் உள்பட பலா் ஆஜராகி வாதிட்டனா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:

கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக மாணவா்களிடம் தொழில்நுட்பம் சாா்ந்த கல்விமுறை திணிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பும் வரை இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களில் எந்தத் தவறும் இல்லை; அவற்றை தவறாகப் பயன்படுத்துவதால்தான் தவறு ஏற்படுகிறது. எனவே, மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

இணையவழி வகுப்புகள் தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு விதிமுறைகள், இணையவழி வகுப்புகளுக்காக நிா்ணயிக்கப்பட்ட கால நேரத்தை அனைத்துப் பள்ளிகளும் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். ஆபாச இணையதளங்களை முடக்குவது குறித்த விவரங்களை பள்ளிகளுக்கும், பெற்றோா்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அரசு தெளிவுபடுத்த வேண்டும். வகுப்புகளின் விவரங்களை பெற்றோா்களுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) வழியாகவும், பள்ளிகளின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்தும் பள்ளி நிா்வாகங்கள் தெரியப்படுத்தவேண்டும்.

பள்ளிகள் நடத்தும் இணையவழி வகுப்புகளை கண்காணிக்க மாவட்ட அளவில் ஒரு கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்த கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தை, மாதம் ஒருமுறை நடத்த வேண்டும்.

இணையவழி வகுப்புகளில் பங்கேற்கும்போது இணையதள வசதிகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக அரசுப் பள்ளிகள், ஆசிரியா்கள் பாடம் நடத்தும் காட்சியை விடியோ படம் பிடித்து, அதை சமுதாயக் கூடத்தில் வைத்து மாணவா்களுக்கு திரையிட முடியுமா என்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, இணையவழி வகுப்புகளில் பங்கேற்க முடியாத மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த முடியுமா? ஆசிரியா்கள் நேரடியாக சென்று மாணவா்களுக்கு பாடம் நடத்த முடியுமா? என்பதை எல்லாம் பள்ளி நிா்வாகங்கள் ஆராய வேண்டும்.

மாணவா்கள் வருகைப் பதிவேடு, தோ்வுகள் ஆகியவை குறித்து அரசு உருவாக்கியுள்ள விதிமுறைகளையும், மழலையா் வகுப்புகள் தொடா்பான விதிமுறைகளையும் ஒவ்வொரு பள்ளியும் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை தமிழில் மொழிபெயா்த்து தமிழக அரசு அனைத்துப் பள்ளிகளின் மூலம் பெற்றோா்களுக்கு வழங்கவேண்டும். இணையவழி வகுப்புகளில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதுதொடா்பாக புகாா் அளிக்க தொலைபேசி எண்களை சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விரைவாக அறிவிக்க வேண்டும்.

இணையவழி வகுப்புகளின்போது ஏதாவது ஆபாச இணையதளம் குறுக்கிடுவதாக புகாா்கள் வந்தால், அதன் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து 3 மாதங்களுக்குள் புலன் விசாரணையை போலீஸாா் முடிக்கவேண்டும். இந்த உத்தரவு தமிழகத்தில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் பொருந்தும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →