பாம்பன் பாலம் அருகே விபத்து: ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் பலி; 3 பேர் காயம்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலம் அருகே வியாழக்கிழமை மாலை நிகழ்ந்த வாகன விபத்தில் காயமடைந்த ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 3 பேர்காயமடைந்தனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலம் அருகே வியாழக்கிழமை மாலை நிகழ்ந்த வாகன விபத்தில் காயமடைந்த ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 3 பேர்
காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த நெகிழி குடம் மற்றும் பொருள் விற்பனை செய்யும் கருங்கல்பாளையம் கணேசன் (38), ஈரோடு விவிசிஆர் நகர் முதல் தெருவைச் சேர்ந்த ராஜாராம் (40), பூந்துரைசாலை பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் (37), கருங்கல்பாளையம் மாதேஸ்வரன் (38) ஆகியோர் திருச்செந்தூருக்கு புதன்கிழமை புறப்பட்டுள்ளனர். காரை சிவா (38) என்பவர் ஓட்டியுள்ளார்.அவர்கள் திருச்செந்தூரிலிருந்து வியாழக்கிழமை பகலில் ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை மாலையில் பாம்பன் பாலம் அருகே கார் சென்றபோது முன்னால் சென்ற வாகன வேகத்தை அதன் ஓட்டுநர் திடீரென குறைத்ததாகக் கூறப்படுகிறது.
முன்சென்ற வாகனத்தில் மோதாமலிருப்பதற்காக சிவா வலது புறம் காரைத் திருப்பியுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பாலத்தின் அருகேயுள்ள சிறுவர் பூங்கா பள்ளத்தில் கவிழ்ந்தது.
கார் கவிழ்ந்ததில் கணேசன் உள்ளிட்ட அனைவரும் காயமடைந்தனர். அவர்களை மீட்ட அந்த பகுதியினர் அவசர ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி கணேசன் உயிரிழந்தார்.
காயமடைந்த மற்ற அனைவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதுகுறித்து மண்டபம் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.