அமைச்சர்களுடன் திமுக முன்னாள் அமைச்சர்: ஈரோடு மாவட்ட அரசியலில் பரபரப்பு
ஈரோட்டில் அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், கட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பங்கேற்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், கட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பங்கேற்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் கூடுதல் பள்ளிக்கட்டடம் மற்றும் ஆய்வகத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் திமுக முன்னாள் அமைச்சா் என்.கே.கே.பி.ராஜா பங்கேற்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006 -2011 திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் என்.கே.கே.பி.ராஜா. ஆள் கடத்தல் புகாரில் சில ஆண்டுகளில் பதவி பறிக்கப்பட்ட இவர், மாவட்டச் செயலராக இருந்து வந்தார்.
Advertisement
2011 ஆம் ஆண்டில் அந்தியூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு ஈரோடு மாவட்டம் கட்சி அமைப்பில் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்ட பிறகு, அவரிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு தெற்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமியும், வடக்கு மாவட்டத்திற்கு நல்லசிவமும் நியமிக்கப்பட்டனர். சில மாதங்களாக முத்துசாமியுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுவந்த என்.கே.கே.பி.ராஜா, மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் வந்து சென்றார். பிற நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.
மேலும், அவரை பொதுவெளியில் பார்ப்பதும் அரிதாகவே இருந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் அதிமுக அமைச்சர்களுடன், அவர் அரசு விழாவில் பங்கேற்றது அதிமுகவினர் மத்தியில் ஆச்சரியத்தையும், திமுகவினர் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.