சீர்காழி அடுத்த விளந்திடசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர், தனது ஊராட்சியில் உள்ள ஏழை மாணவ, மாணவிகள் 17 பேரின் மூன்றாண்டுக்கான கல்லூரி படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டு அவர்களை கல்லூரியில் சேர்த்துள்ளார்.
சீர்காழி ஊராட்சி ஒன்றியம் விளந்திடசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரா.ரமணிராஜ்(34). இளம் பட்டதாரியான இவர், விளந்திடசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்புக்கு சுயேட்சையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்றது முதல் தனது ஊராட்சியில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து தூர்வாரப்படாத குளங்களை கண்டறிந்து தூர்வாரினார்.
பல ஆண்டுகளாக பாசனவாய்க்கால்களில் அடைப்பட்டிருந்த 3 டன் குப்பைகளை ஜேசிபி இயந்திரம் வைத்து அகற்றி தூய்மைப்படுத்தினார். இவ்வாறு முன்மாதிரி ஊராட்சியாக மாற்றிட பல்வேறு முயற்சிகளை ரமணிராஜ் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே தனது ஊராட்சிக்கு உட்பட்ட நிகழாண்டு கல்லூரியில் சேர உள்ள 17 ஏழை எளிய மாணவ, மாணவிகள் தேர்வு செய்த ரமணிராஜ் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர முழு முயற்சி செய்து கல்லூரியில் சேர்த்துவிட்டுள்ளார்.
மேலும் அந்த மாணவ, மாணவிகள் மூன்றாண்டுகள் முழுமையாக கல்லூரி படிப்பை பூர்த்தி செய்யும் வரையில் ஆகக்கூடிய முழு கல்வி செலவினையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார். ஊராட்சித் தலைவரின் இந்த முயற்சியை அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.