திமுக முன்னாள் எம்எல்ஏ மா.மீனாட்சி சுந்தரம் காலமானார்
வேதாரண்யம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ மா.மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் திமுக முன்னோடிகளில் ஒருவரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான மா.மீனாட்சி சுந்தரம் (84) உடல் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.
வேதாரண்யம் தொகுதியில் 1971, 1977, 1984 ஆகிய பேரவைத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர்.
தனது 17 வயது முதல் திமுக உறுப்பினராக இருந்த கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்த மீனாட்சி சுந்தரம், தற்போது அந்த கட்சியின் நாகை மாவட்ட அவைத் தலைவராக இருந்து வந்தார்.
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி திமுக நடத்திய பல போராட்டங்களில் பங்கேற்று, மிசாவில் ஓராண்டு காலம் தண்டனை பெற்றவர்.
இவருக்கு, திமுக சார்பில் வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான 'பெரியார் விருது' செப். 15-ம் தேதி வழங்கப்பட்டது.
இவருக்கு மனைவி முத்துலெட்சுமி, மகன்கள் திமுக நகரச் செயலாளர் புகழேந்தி, வழக்குரைஞர் அன்பரசு ஆகியோர் உள்ளனர்.
இவரது உடல் வேதாரண்யம் நாகை சாலை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், ஆயக்காரன்புலம் கிராமத்தில் திங்கள் மாலை அடக்கம் செய்யப்படுகிறது.