தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், பூவைமாநகர் கிராமத்தைச் சேர்ந்த சிவஞானம் மகன் அறிவரசன் சாலை விபத்தில் உயிரிழந்தார். அறந்தாங்கி வட்டம், சிலட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார். அறந்தாங்கி வட்டம், கத்தரிக்காடு கிராமத்தைச் சேர்நத ராமலிங்கம் மகன் கார்த்திக் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அறந்தாங்கி வட்டம், மறமடக்கி ஊராட்சி, கொரலான் குடியிருப்பைச் சேர்ந்த பழனியப்பன் மகன் பிரபாகரன் பணி முடிந்து வரும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். கந்தர்வகோட்டை வட்டம், சமுத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் முருகேசன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், முனியப்பம்பாளையம் கிராமத்தில் கான்கீரிட் ஊற்றப்பட்ட தொட்டியின் உள்ளிருக்கும் மரமுட்டு பலகையை எடுக்க முற்பட்ட போது, முருகேசன் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா கிராமத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் மகள் செல்வி சுகன்யா கிணற்றில் தவறி விழுந்து இறந்தார் எனவும், அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்த தமிழழகனும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் மற்றும் வட்டம் சூரியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் மகள் சிறுமி ஹர்ஷிதா பேருந்து மோதி உயிரிழந்தார்.
சத்தியமங்கலம் வட்டம், தொப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராம கவுண்டர் மகன் மணிமாறன் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து, உயிரிழந்தார். சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகர் உள்வட்டம், பனையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னான் மகன் மாதன் சாலை விபத்தில் உயிரிழந்தார். சத்தியமங்கலம் வட்டம், தொட்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் குமார் மகன் சதீஸ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
சத்தியமங்கலம் வட்டம், விண்ணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரங்கன் மகன் மாரிச்சாமி சாலை விபத்தில் உயிரிழந்தார். சத்தியமங்கலம் வட்டம், குள்ளம்கரடு பகுதியைச் சேர்ந்த பசுராஜ் மகன் குமார் சாலை விபத்தில் உயிரிழந்தார். சத்தியமங்கலம் வட்டம், குத்தியாலத்தூர் உள்வட்டம், திங்களூர் கிராமத்தைச் சேர்ந்த திம்மையன் மகன் லோகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
சத்தியமங்கலம் வட்டம், பனையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சத்தியமூர்த்தி சாலை விபத்தில் உயிரிழந்தார். தாளவாடி வட்டம், மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்த அய்யாமுத்து மகன் ரவிச்சந்திரன் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், நம்மானேரி கிராமத்தைச் சேர்ந்த மகிமைராஜ் மகன் செல்வன் சிமியோன்ராஜ் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார். வாலாசா வட்டம், கொண்டகுப்பம் மதுரா குமணந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சரோஜா கணவர் பெரியசாமி சாலை விபத்தில் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வள்ளுவர் மேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி பரிமளா பணி முடிந்து வீடு திரும்பும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், சிங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாரி மகன் ரத்தினசாமி நீரேற்றும் பம்பில் அடைப்பினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மேற்கண்ட பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 22 நபர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 22 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.