என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி
கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள என்எல்சி இந்தியா நிறுவன அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 17 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள என்எல்சி இந்தியா நிறுவன அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 17 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ஆவது அனல் மின் நிலையத்தின் 5-ஆவது அலகில் புதன்கிழமை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென கொதிகலன் வெடித்து தீப்பிடித்தது.
இந்த விபத்தில் மேலக்குப்பம் பத்மநாபன், கல்லமேடு வெங்கடேசப் பெருமாள், பெரிய காப்பான்குளம் சிலம்பரசன், கொள்ளிருப்பு அருண்குமார், அத்திரிகுப்பம் ராமநாதன், நெய்வேலி நகரியத்தைச் சேர்ந்த நாகராஜ் ஆகிய 6 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தி, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் ரவிச்சந்திரன் (43), சுரேஷ் (50), சிவக்குமார் (53), வைத்தியநாதன் (48), ஜோதிராமலிங்கம், கே.ரவிச்சந்திரன் (நிரந்தரத் தொழிலாளர்கள்), இளங்கோ, செல்வகுமார் (23), செல்வராஜ், செங்கோலை, ஜெயசீலன் (55), அனந்தபத்மநாபன் (50), மணிகண்டன், வேல்முருகன், கோவிந்தன் (43), மோகன்ராஜ் (25), வெங்கடேசன் (ஒப்பந்தத் தொழிலாளர்கள்) ஆகிய 17 பேர் தீக் காயமடைந்தனர்.
இவர்களில், மோகன்ராஜ் என்எல்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்ற அனைவரும் சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த தொழிலாளர்களின் உறவினர்கள் மருத்துவமனை, அனல் மின் நிலைய வளாகத்தில் குவிந்தனர். இதனால், அங்கு காவல் துறையினர் அதிகளவில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொடரும் விபத்துகள்: கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி அனல் மின் நிலையம் 2, 6-ஆவது அலகில் நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். ஒரு தொழிலாளி காயமடைந்தார். இந்த ஆண்டு கடந்த மே மாதம் 7-ஆம் தேதி இதே அலகில் நிகழ்ந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இதே அனல் மின் நிலையத்தின் 5-ஆவது அலகில் புதன்கிழமை நிகழ்ந்த கொதிகலன் வெடித்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்துகள் தொழிலாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
பேச்சுவார்த்தை: இதைத் தொடர்ந்து, 2-ஆவது அனல் மின் நிலைய வளாகத்தில் என்எல்சி தலைவர் ராகேஷ் குமார், இயக்குநர்கள், அதிகாரிகள், மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் ஆகியோர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முதல்வருடன் அமித் ஷா பேச்சு: விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக சுட்டுரைப் பதிவில் வேதனை தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியை தொடர்புகொண்டு பேசினார்.
என்எல்சி முதன்மை
பொது மேலாளர் பணியிடை நீக்கம்
5-ஆவது அலகின் முதன்மைப் பொது மேலாளர் கோதண்டத்தை என்எல்சி இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. அவருக்குப் பதிலாக அந்தப் பொறுப்புக்கு முதன்மைப் பொது மேலாளர் கெளதமன் நியமிக்கப்பட்டார்.
உயர்நிலைக் குழுக்கள் அமைப்பு
என்எல்சி இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய என்.டி.பி.சி. நிறுவன தொழில்நுட்ப முன்னாள் இயக்குநர் வி.கே.மகாபாத்ரா தலைமையில் ஒரு உயர்நிலைக் குழுவும், என்எல்சி இந்தியா மின் துறை இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. 2-ஆவது அனல் மின் நிலையத்தின் 4, 5, 6, 7அலகுகள் தற்காலிகமாக முழுப் பாதுகாப்புத் தணிக்கைக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.